நாடாளுமன்றம் மீண்டும் கூடியது – ஆளும்கட்சி இன்றும் புறக்கணிப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் ஆளுங்கட்சி வரிசை ஆசனங்கள் வெறுமையாக காட்சி அளிக்கின்றன.
இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்த்தன,தனது கீச்சகப் பக்கத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரன் முன்னணியின் போலி அரசாங்கத்தை நாடாளுமன்றத்தில் காணவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற அமர்வுக்கு வராத சில உறுப்பினர்கள், நாடாளுமன்ற உணவகத்தில் மக்களின் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதாக, ஐதேக உறுப்பினர் அஜித் மன்னம்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.