‘நம்பிக்கையில்லா பிரேரணை – எனக்கு வைத்த பொறி’
தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நொவம்பர் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தான் நிராகரித்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனை அவர், வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது உறுதி செய்தார்.
“நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்வதற்கு, நொவம்பர் 14ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன்.
அதற்குக் காரணம், அதில் ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமரைப் பதவி நீக்கியும், புதிய பிரதமரை நியமித்தும், சிறிலங்கா அதிபர் வெளியிட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளும் அரசியலமைப்புக்கு முரணானவை, செல்லுபடியற்றவை என்று கூறப்பட்டிருந்தது.
அந்தப் பந்தியை உள்ளடக்கிய பிரேரணையை ஏற்றுக் கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமக்க நேரிடும்.
பின்னர் அது, எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம்.
அதனை நான் ஏற்றுக்கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிவிட்டதாக, எதிர்காலத்தில் என் மீது குற்றவிசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும்.” என்றும் தெரிவித்துள்ளார்.