நம்பிக்கையில்லா பிரேரணையை உறுதி செய்தது நாடாளுமன்ற பதிவேடு
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14ஆம் நாளும், 16ஆம் நாளும், நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யும் நாடாளுமன்றப் பதிவேடு (ஹன்சார்ட்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்று, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றப் பதிவேட்டின் படி, பிரதமர், அமைச்சர்கள், அவைத் தலைவர், அரசதரப்பு பிரதம கொரடா என எவரும் இல்லை என்ற நிலை உறுதியாகியுள்ளது.
இந்த நாடாளுமன்றப் பதிவேட்டை முன்வைத்து சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுடும் சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.