மேலும்

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மகிந்தவிடம் கோரவுள்ளது ஐதேக

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை பிற்பகல் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு- சர்ச்சைக்குரிய சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், ஐக்கிய தேசிய முன்னணி கோரவுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகள் குரல் வாக்கெடுப்பு மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட போதும் அதனை சிறிலங்கா அதிபர் ஏற்க மறுத்து வருகிறார்.

இந்தநிலையில் நாடாளுமன்றம் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது பெரும்பான்மையை எந்த வழியிலாவது நிரூபிக்குமாறு  ஐக்கிய தேசிய முன்னணி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐதேக தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல, “ மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி, அதற்கான பிரேரணையை உடனடியாக எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம்.

குரல் வாக்கெடுப்பு நடத்துவதையும் கூட எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் அனுமதிப்போம். இலத்திரனியல் வாக்கெடுப்பு என்றாலும், சரி, பெயர் அழைத்து வாக்களிப்பது என்றாலும் சரி, அரசாங்கம் எதை விரும்பினாலும் அதற்கு நாங்கள் தயார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நியமித்த பிரதமரை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு கோர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *