மேலும்

பொதுத்தேர்தலுக்கான முதல் அரசிதழ் அறிவிப்பு வெளியானது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி.பெரேரா நேற்று வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தெரிவாக வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சிகள் கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை.

எனினும், ஒவ்வொரு சுயேட்சைக் குழுவும், தாம் போட்டியில் நிறுத்தும் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்தி்ல் இருந்தும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின், எண்ணிக்கையை விட, மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் உள்ளடக்க வேண்டும்.

இதற்கமைய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு-

கொழும்பு – 19, கம்பகா – 18, குருநாகல – 15, கண்டி – 12, இரத்தினபுரி – 11, களுத்துறை -10, காலி – 10, அனுராதபுர -9 , கேகாலை – 9, புத்தளம் -8, பதுளை-8, நுவரெலிய– 8, மாத்தறை-7, அம்பாந்தோட்டை -7, யாழ்ப்பாணம்-7, திகாமடுல்ல -7, வன்னி -6, மொனராகல– 6, மட்டக்களப்பு -5, பொலன்னறுவ-5, மாத்தளை 5 , திருகோணமலை– 4.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *