சிறிலங்கா ஜனநாயக நடைமுறைகளை மதிக்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி ஐந்தாம் நாள் தேர்தலை நடத்தும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை, ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ், கவலையுடன் அறிந்து கொண்டுள்ளார் என்று அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,
“ஜனநாயக கட்டமைப்புகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்த விரும்புகின்றார்.
அத்துடன், கருத்து வேறுபாடுகளுக்கு சட்டத்தின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றியும் தீர்வை காணவேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சிறிலங்கா அரசாங்கம் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் உறுதி செய்யவேண்டும். மனித உரிமைகள், நீதி மற்றும் நல்லிணக்கத்தை பின்பற்ற வேண்டும் என்றும், மீண்டும் அழைப்பு விடுக்கிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.