பரந்துபட்ட கூட்டணி – புதிய சின்னத்தில் களமிறங்கும் ஐதேக
மைத்திரி- மகிந்த கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், தயாராகி வருகிறது.
நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் இதுகுறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
இதன்போது, சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவை பிரதமர் வேட்பாளராக ஐதேக களமிறக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
புதிய கூட்டணி, புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது,
கடந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னம் சின்னத்தில், போட்டியிடுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.