ரணிலுக்கு சீனா அளித்துள்ள உத்தரவாதம்
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளில், தாம் தலையீடு செய்யமாட்டோம் என்று சீனா தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க மகிந்த ராஜபக்சவுக்கு சீனா நிதி அளிக்கிறது என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியிருந்தார்.
இதகுறித்து அலரி மாளிகையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பிய போது, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க மறுத்துள்ளார்.
எனினும், சீனத் தூதுவர் தன்னைச் சந்தித்த போது, சீனா இதில் தலையீடு செய்யாது என்று உறுதியளித்தார் என்றும் அவர் கூறினார்.
“கடந்த சனிக்கிழமை சீனத் தூதுவர் வந்து சந்தித்த போது, அரசியல் நெருக்கடிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடு செய்யாது என்று அவர் உறுதி அளித்தார்.
பெரும்பாலான வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டு இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே கருதுகின்றனர்.” என்றும் அவர் கூறினார்.