ரணிலையும் சந்தித்தார் சீனத் தூதுவர்
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா அதிபரால் நேற்றுப் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நேற்று நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, அவரது இல்லத்தில், சீன இராஜதந்திரிகளுடன் இணைந்து சந்தித்துப் பேசிய பின்னரே, அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவை சீனத் தூதுவர் தனியாகச் சந்தித்துள்ளார்.
முன்னதாக, 20இற்கும் மேற்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்ற கூட்டம் அலரி மாளிகையில் நடந்திருந்தது. அதில் சீனத் தூதுவர் பங்கேற்கவில்லை.
சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துச் செய்தியை, மகிந்த ராஜபக்சவிடம் இன்று சீனத் தூதுவர் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.