மேலும்

‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உணவகம்’ என்று வடக்கு மாகாண சபை வைத்திருக்கிறது.

ஏனைய எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கில் ‘அம்மாச்சி’ என்று இதற்குப் பெயர் வைத்திருக்கின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, ‘அம்மாச்சி’ என்று அந்த உணவகங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதால், தொடர்ந்தும் அதே பெயரைத் தான் வைக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.

கோண்டாவிலில் இந்த உண வகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25 ஆம் நாளுக்குப் பின்னர் வைக்கலாம்.

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கெல்லாம் “அம்மாச்சி“ என்று தான் வைக்க வேண்டும் என்றில்லை.

அவற்றை பாரம்பரிய உணவகங்கள் என்று போடலாம். அதிலும் பாரம்பரியம் மிக்க உணவகம் என்று போடுவது நல்ல பெயராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, “அம்மாச்சி உணவகம்“ என்ற பெயரை மாற்றுமாறும், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உணவகங்களுக்கு சிங்களப் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.

இந்த நெருக்கடியினால், எந்தப் பெயரும் சூட்டப்படாமல் கோண்டாவிலில் ஒரு உணவகம் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், வரும் 24ஆம் நாளுடன் முடிவடைந்த பின்னர், நிர்வாக அதிகாரம் ஆளுனரின் கையில் வரவுள்ளது.

அதன் பின்னர், அம்மாச்சி உணவகங்களின் பெயர்களை மாற்றுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், வடக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தும் வேலையை ஆளுனர் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார் என்று ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *