சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க ஜெனரல் சந்திப்பு
அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி, ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் தலைமையிலான குழுவினர், இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.
நேற்று முன்தினம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கான இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் ரணவக்கவும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்துக்கும் இன்று சென்றிருந்த ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.