சிறிலங்கா வந்தார் தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா, இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
தனி விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.
அமைச்சர்கள், சரத் பொன்சேகா, பைசர் முஸ்தபா உள்ளிட்ட பல அமைச்சர்களும், வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகளும் தாய்லாந்து பிரதமரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் தாய்லாந்து பிரதமருக்கு இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்காவின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள தாய்லாந்து பிரதமர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.