மேலும்

நாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார்.

கடந்த ஜனவரி மாத இறுதியில், இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட விஜய கேசவ் கோகலே சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

நாளை கொழும்பு வரும், இந்திய வெளிவிவகாரச் செயலர், உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அவர் நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு இழுபறியாக உள்ள சுமார் 15 வரையான பாரிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து இந்தப் பேச்சுக்களில், கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மத்தல விமான நிலைய கூட்டு முயற்சி உடன்பாடு, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், எட்கா உடன்பாடு குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே கூடுதல் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *