தேர்தலில் குதிக்கப் போகிறீர்களா? – அருட்தந்தை இம்மானுவேலிடம் கேட்ட முதலமைச்சர்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.
யாழ்ப்பாண ஆயர் இல்லத்தில் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்ற நடத்தியிருந்தார்.
இதன்போது, அண்மைக்காலமாக, வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் போட்டியிடப் போவதாக உலாவிய செய்தி குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அரசியலில் நுழையும் ஆர்வம் எனக்கு இல்லை. மக்களுக்கு தொண்டு செய்வதே எனது நோக்கம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் உள்ளதா என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை என்று அவருக்கு நான் கூறினேன்” என்று பதிலளித்தார்.