கூட்டு அரசில் இருந்து விலகியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து என்று உருவாக்கிய கூட்டு அரசாங்கமே, தற்போது முற்றாக உடைந்துள்ளது.
அதேவேளை, தற்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கின்ற போது, புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சாத்தியம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தமது கட்சி சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் நேற்று இரவு நடந்த பேச்சுக்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று மற்றொரு கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த பின்னரே, இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவது குறித்தே பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது,
இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில், தம்மைச் சந்திக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவை சிறிலங்கா அதிபர் கேட்டுள்ளார்.
அதேவேளை, இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது,