மேலும்

அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்

Central-Bank-of-Sri-Lankaஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான, கடந்த 12ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 156.14 ரூபாவாக இருந்தது. இது நேற்றுமுன்தினம், 14ஆம் நாள், 156.74 ரூபாவாக சரிந்தது.

நேற்று அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்து, 157.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது, உள்நாட்டில் இறக்குமதிப் பொருட்களின் விலையை அதிகரித்து பணவீக்கம் ஏற்படவும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைவதற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் உறுதிப்பாடு தொடர்ந்தும் மோசமான நிலையில் இருப்பதால் சிறிலங்காவின் பொருளாதார நிலை குறித்து பொருளியல் நிபுணர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று செய்தி்யாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அரசியல் தலைவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, உறுதிநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

அரசியல் உறுதிப்பாடு இல்லாததால், நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து செல்வதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *