கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக கூடிய புலம்பெயர் தமிழர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அப்போது, தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்த சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து, கோபத்துடன் கழுத்தை அறுத்து விடுவேன் எனற சைகை மூலம் எச்சரித்துள்ளார்.
அடுத்தடுத்து மூன்று முறை அவர் கழுத்தில் கை வைத்து இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து விட்டு கோபத்துடன் உள்ளே சென்றார்.
இந்தக் காணொளி தற்போது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.