அர்ஜூன் அலோசியஸ், பலிசேனவிடம் 12 மணிநேரம் விசாரணை – விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுள்ள பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையானரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை, 6 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் வைத்து அர்ஜூன் அலோசியசும், வெள்ளவத்தையில் உள்ள வீட்டில் வைத்து கசுன் பலிசேனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரைச் சந்தேக நபர்களாக நீதிமன்றம் அறிவித்த நிலையில், நேற்றுக்காலை திடீரென இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரிடம், 12 மணி நேரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர், அவர்கள் நேற்றிரவு கோட்டே நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.