கூட்டமைப்பு நாடாளுமன்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்காது
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் 6ஆம் நாள் நடைபெறவுள்ள, அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக தேசிய முன்னணியும் என்று அறிவித்துள்ளன.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 6ஆம் நாள், காலை 10.30 மணிக்கு சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் வரும் 7ஆம் நாளுடன் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
தேர்தல் பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதால் தமது கட்சியினால், இந்த விவாதத்தில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு இவர்கள் அறிவித்துள்ளனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.