காங்கேசன்துறை துறைமுக புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு தயார்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆவணம் சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் சிறிலங்கா துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்தவுடன், உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடுவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் இறுதிக் கட்ட கலந்துரையாடல் நடத்தப்படும்.
புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதும், இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் கூறியுள்ளார்.
