உள்ளூராட்சித் தேர்தல் – கிளிநொச்சியில் மல்லுக்கட்டும் 9 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களில் 09 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
நேற்று நண்பகலுடன் முடிந்த வேட்புமனுத் தாக்கலை அடுத்து, 9 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட 26 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது, அன்னலட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன், ஏனைய 25 வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கரைச்சி பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி, ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய 8 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழு ஒன்றும் போட்டியிடுகின்றன.
பூநகரி பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி, லங்கா சமசமாசக் கட்சி ஆகிய 7 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழு ஒன்றும் போட்டியிடுகின்றன.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி, லங்கா சமசமாசக் கட்சி ஆகிய 7 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழு ஒன்றும் போட்டியிடுகின்றன.