யாழ். மாநகரசபையில் 13 வட்டாரங்களைக் கோட்டை விட்டது உதயசூரியன் கூட்டணி
யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்த 13 வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் நேற்று நண்பகல் முடிவடைந்ததை அடுத்து, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது ஈபிஆர்எல்எவ்வுடன் உதயசூரியன் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ். மாநகர சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு தொடர்பாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
வேட்பாளராக இடம்பெற்ற ஒருவர், ஏனைய 12 வேட்பாளர்களுக்கும் சமாதான நீதிவானின் உறுதிப்படுத்தல் ஒப்பமிட்டிருந்தார்.
இதனால் ஒட்டுமொத்த வேட்புமனுவையும் நிராகரிப்பதா என ஆராய்ந்த அதிகாரிகள், கடைசியில், வட்டார அடிப்படையில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த 13 வேட்பாளர்களையும் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வேட்புமனுவை ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, 27 வட்டாரங்களைக் கொண்ட யாழ். மாநகரசபைக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 14 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர்.