உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் – ராம்நாத் கோவிந்த்
உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று இந்திய குடியரசுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.
“இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் தனித்துவமானது. எப்போதும் இறுக்கமானது. நட்புறவு சார்ந்தது. வரலாறு, பண்பாடு, இன மற்றும் நாகரிக உறவுகளை அடிப்படையாகக் கொண்டது.
அபிவிருத்தி ஒத்துழைப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முக்கியமானதொரு அங்கமாக உள்ளது.
சிறிலங்காவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா ஆர்வமுடன் இருக்கிறது.
இரண்டு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்புகளின் மூலம் நிறைய இலக்குகளை அடைய முடியும். பரஸ்பர நன்மையளிக்கும் திட்டங்களில் சிறிலங்காவுடன் பங்காளராக இணைந்து செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.