நாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில், முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு வரும் 20ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே, சிறிலங்கா அதிபரின் ஐ.நா பயணக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், தாம் 20ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம் என்று முரண்டுபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருத்தச்சட்ட வரைவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.