ஐ.நா தடையை மீறி வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி – சிறிலங்கா விசாரணை
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவிடம் இருந்து கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்கா உள்ளிட்ட 11 நாடுகள் இரும்பு, செம்பு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்திருப்பதாக, ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
ஐ.நாவின் தடைகளை மீறியதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நிலையிலேயே, வடகொரியாவிடம் இருந்து, இரும்ப, செம்பு போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடகொரியா மீது ஐ.நாவினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஒன்றையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடவுள்ளது.
தடைகள் தொடர்பாக உள்ளூர் வர்த்தகர்கள் அறிந்து கொள்வதற்கு இந்த வர்த்தமானி அறிவிப்பு உதவியாக இருக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் சட்ட பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.