ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பக்க நிகழ்வுகளாக பல்வேறு உலகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, சீன அதிபர், ஷி ஜின்பிங், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, உள்ளிட்டோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தற்போது வரை, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடனான சந்திப்புகள் மாத்திரம் உறுதியாகியுள்ளன. ஏனைய தலைவர்களுடனான சந்திப்புகளும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முதல்முறையாகச் சந்திக்கவுள்ளார்.
மேலும், உலகத் தலைவர்களுக்கு ஐ.நா பொதுச்செயலர் அளிக்கும் மதியபோசன விருந்திலும், அமெரிக்க அதிபர் அளிக்கும் இராப்போசன விருந்திலும், சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்.