கொழும்பு மேல்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக லலித், அனுஷ மேல்முறையீடு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவும், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர்.
2015 அதிபர் தேர்தல் காலத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 600 மில்லியன் ரூபா நிதியை முறைகேடான முறையில், தேர்தல் நலனுக்காக சில் துணிகளை விநியோகிக்கப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கடந்தவாரம் விதித்திருந்தது.
இதையடுத்து, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுக்களைத் தாக்கல் செய்தனர்.