சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் சென்ற வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்து நாசம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருந்தனர் என்றும், தீப்பிடித்ததும், அவர்கள் வாகனத்தில் இருந்து குதித்து வெளியேறியதால், காயங்களின்றி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்த இராணுவ, மற்றும் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.