நாளை பதவி விலகுகிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச
சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாளை தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பௌத்த சாசன அமைச்சில் விஜேதாச ராஜபக்ச நாளை நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில், தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அவர் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும், அதன் பின்னர் பதவி விலகுவார் என்றும், விஜேதாச ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக, விஜேதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்தை அடுத்து, அவர் மீது சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, விஜேதாச ராஜபக்சவையும், அவரது சந்திப்புகளையும் அரச புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.