அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு – சீன நிறுவனத்துடன் சிறிலங்கா கைச்சாத்து
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் உடன்பாடு இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சின் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் ஆகியோரின் முன்னிலையில், துறைமுக அதிகார சபையின் தலைவரும், சீன நிறுவனத்தின் தலைவரும், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
99 ஆண்டுகளுக்கு செல்லுபடியான இந்த உடன்பாட்டின் கீ்ழ், சீன நிறுவனம் 1.12 பில்லியன் டொலரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்யும்.
தேவைப்பட்டால் திருத்தங்களைச் செய்து கொள்ளக் கூடிய வகையில் இந்த உடன்பாடு திறந்த நிலையிலேயே இருக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த உடன்பாடு அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
விதிமுறைகள் தொடர்பாக திருத்தங்கள் செய்து கொள்ளவும் முடியும். சாதகமான விதிமுறைகளை இதில் உள்ளடக்க முடியும். என்றும் அவர் கூறினார்.