சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பு
முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
சிறிலங்கா படையினரின் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது மற்றும் முப்படையினருக்கான வெளிநாட்டுப் பயிற்சிகளை முறையாகப் பேணுதலை மையப்படுத்தி இந்தச் சந்திப்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு சிறிலங்கா படையினரால் எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா படையினர் தொடர்பாக, உலக சமுதாயத்திடம் ஏதாவது தவறான கருத்து இருந்தால் அதனை எவ்வாறு களையலாம் என்பது குறித்தும் நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சிறிலங்கா படையினரின் கௌரவம், அவர்களி்ன் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தை எவ்வாறு அணுகுவது என்பன போன்ற விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன.
அனைத்துலக சமூகத்தை வெற்றி கொள்ளும் நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையில், மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான இந்தச் சந்திப்பில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் ஜகத் விஜேவீர, இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, மற்றும் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.