ஐ.நா நிபுணருக்கு அனுமதி கொடுத்தது யார்? – அமைச்சரவையில் சீறிய மைத்திரி
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தது யார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.
சிறிலங்காவில் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், தனது பயணத்தின் முடிவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது திட்டமிட்ட சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அத்துடன், நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர் விமர்சித்திருந்தார்.
இதற்கு சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்த நிலையிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திப்பதற்கு, ஐ.நா அறிக்கையாளருக்கு அனுமதி கொடுத்தது யார் என்று சிறலங்கா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே, இதற்கான அனுமதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.