அனர்த்தப் பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையினர்
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் லேக் எரி கப்பலில், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புக்குப் பிந்திய உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, யுஎஸ்எஸ் லேக் எரி என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இந்தப் போர்க்கப்பலில் உள்ள, அமெரிக்க கடற்படையினர், கொழும்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
119 அமெரிக்க கடற்படையினரும், 50 சிறிலங்கா கடற்படை மரைன் படையினரும் இணைந்து மாத்தறையில் அனைகளை திருத்தியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
72 அமெரிக்க கடற்படையினரும், 21 சிறிலங்கா கடற்படை மரைன் படையினரும் இணைந்து, காலி, கொழும்பு மாவட்டங்களில் கிணறுகளை சுத்தம் செய்தல், நீர் சுத்திகரிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வாரகாலம் அமெரிக்கப் படையினர் சிறிலங்காவில் தங்கியிருந்து இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.