ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, தற்போது நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக, முறைப்பாடு ஒனறை செய்யவுள்ளதாகவும், றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜாக்குலின் அலெக்சான்டர் மாசா மாரெல்லியிடம் இந்த முறைப்பாடு கையளிக்கப்படும்.
சிறிலங்காவின் நீதித்துறையை விமர்சித்தும், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுத்தும், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அவர் தலையீடு செய்கிறார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ள கலப்பு நீதிமன்றம் சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல்.
எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காகவும், எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்தமைக்காகவும் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.