தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் உடல் நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
நேற்றுக்காலை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், பின்னர் சாவகச்சேரி பேருந்து நிலையத்திலும், அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விநாயகமூர்த்தி அவர்களின் உடல், பின்னர் கொக்கவிலில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து இடம்பெற்று இறுதிச்சடங்குகளை அடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, ஆர்னோல்ட், சர்வேஸ்வரன் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தினர்.
பெருமளவான மக்களின் கண்ணீருக்கிடையில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் உடல் தீயுடன் சங்கமமானது.