இந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஐஎன்எஸ் கிர்ச் என்ற இந்திய கடற்படைக் கப்பலில் எடுத்து வரப்பட்ட அவசர உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் அதிகாரபூர்வமாக கையளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், இந்தியக் கடற்படைக் கப்பலில் உதவிப் பொருட்கள் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டன.
அதேவேளை, மேலும் இரண்டு கப்பல்களில் இந்தியாவின் உதவிப் பொருட்கள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
ஐஎன்எஸ் சர்துல், ஐஎன்எஸ் ஜலஷ்வா ஆகிய கப்பல்கள் மருந்துகள், உடைகள், குடிநீர் உள்ளிட்ட உதவிப் பொருட்களுடன் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் மருத்துவ மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான சுழியோடும் குழுக்களும், சிறிய படகுகள் மற்றும் உலங்கு வானூர்திகளுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நாளை காலை அல்லது மதியம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஐஎன்எஸ் சர்துல் கொச்சி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலிலும் உதவிப் பொருட்களுடன் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்றிரவு இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.