கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்
கடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.
சிட்னியில் நேற்று முன்தினம் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரிசே பேனேயைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே சிறிலங்கா அதிபர் இந்த வாக்குறுதியை அளித்திருந்தார்.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரிடம் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் இராணுவ கடெற் அதிகாரிகளுக்கு அவுஸ்ரேலியா தற்போது பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் நடுத்தரநிலை மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் பயிற்சிகளை விரிவாக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டார்.
சிறிலங்கா அதிபரின் இந்தக் கோரிக்கைக்கும், அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.