சிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலிய பிரதமர் பேச்சு – ஆட்கடத்தல் தடுப்பு குறித்து முக்கிய கவனம்
அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
கான்பெராவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இரண்டு தலைவர்களும் முதலில் தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தினர். அதன் பின்னர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இருதரப்பு பேச்சுக்களிலும் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுக்களில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கிக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் ஆகியோரின் முன்னி்லையில், கூட்டுப் பிரகடனம் ஒன்றிலும், புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றிலும், ஒத்துழைப்பை பலப்படுத்தும் கடிதம் ஒன்றிலும் கையெழுத்திடப்பட்டது.
அவுஸ்ரேலியா- சிறிலங்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டுப் பிரகடனத்தில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப்பும், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் கையெழுத்திட்டனர்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கும், அவுஸ்ரேலியப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுக்களில் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.