மேலும்

வடக்கில் 1000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

sagala-ratnayakaவடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வந்த, வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கோரும் ஒத்திவைப்பு வேளை தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

“கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா பிரதமர், வேலையற்ற இளைஞர்களின் பிரச்சினை தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். வடக்கில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை போர் தடுத்து விட்டது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையின் முதல் கட்டமாக, வடக்கில் 1000 வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறுமாறு பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் பணி நிலைக்கான வெற்றிடங்களே நிரப்பப்படவுள்ளன. பெரும்பாலும் கலைப்பட்டதாரிகளே இதில் உள்ளீர்ப்புச் செய்யப்படுவர். அவர்களுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதுபோன்று கிழக்கிலும் வேலையற்றோர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *