விமான பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஒழுங்குமுறைக்கு அமையவே, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வரும் ஜூன் முதலாம் நாளில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளன.
புதிய நடைமுறைகளின் படி, விமானப்பயணிகள் கையில் காவிச்செல்லும் பையில் எடுத்துச் செல்லக் கூடிய திரவப் பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதில் திரவப் பொருட்கள் மற்றும் ஜெல் என்பன உள்ளடங்கும்.
எல்லா திரவப் பொருட்களும் வெளிப்படையான, முத்திரையிடப்பட்ட, 20 X 20 அளவுடைய பிளாஸ்டிக் பைகளிலேயே கொண்டு செல்ல வேண்டும்.
திரவப் பொருட்கள் ஒரு லீற்றரை விட அதிகமாக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு பயணியும் ஒரு பிளாஸ்டிக் பையை மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்.
மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் மருத்துவரின் வழிகாட்டலுக்கு ஏற்ப அனுமதிக்கப்படும்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு சேவைகள் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.