குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்
குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்ததால், முரண்பாடுகள் தலைதூக்கியிருந்தன.
இதற்கிடையே, மல்லவப்பிட்டியவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ மத வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு வார காலப்பகுதியில் மூன்று வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.