மகிந்த – மோடி சந்திப்புக்கு பச்சைக்கொடி காட்டிய மைத்திரி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கு தாமே அனுமதி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரலகன்விலவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
‘இந்தியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெசாக் நாளன்று கருப்புக் கொடிகளை ஏற்றுமாறு அழைப்பு விடுத்தவர்கள், இரவோடு இரவாகச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர்.
மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமரைச் சந்திக்க விரும்புவதாக இந்தியத் தூதுவர் என்னிடம் தெரிவித்த போது, கருப்புக்கொடி பரப்புரையாளர்களை இந்தியப் பிரதமரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவரிடம் நான் கூறினேன்.
நான் பதவிக்கு வந்த பின்னர், போர்க்குற்ற நீதிமன்ற விவகாரத்தை, மின்சார நாற்காலியை மேலும் அதுபோன்ற விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டேன். ” என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.