காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
காலி மாவட்டச் செயலகத்தின் இணையத்தளத்தினுள் நுழைந்த இணைய ஊடுருவிகள், அதில் பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள் ஜிந்தாபாத், பாகிஸ்தானிய இராணுவம் ஜிந்தாபாத், பாகிஸ்டதான் ஐஎஸ்ஐ ஜிந்தாபாத், காஷ்மீர் விடுதலை, சிரிய விடுதலை, பலஸ்தீன விடுதலை என்று செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
உலகெங்கும் 99 நாடுகளின் இணையத்தளங்கள் மீது கடந்தவாரத்தில் ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சிறிலங்காவிலும் இத்தகைய தாக்குதல் இடம்பெறாலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.
எனினும், காலி மாவட்டச் செயலக இணையத்தளம் மீதான சைபர் தாக்குதலுக்கும், ரன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவின் கணினி அவசர நடவடிக்கை குழுவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட காலி மாவட்டச் செயலக இணையத்தளம் மீட்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.