இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை
நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ‘சிறிலங்கா அதிபர், பிரதமர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை தொடர்ச்சியாக கூடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், கட்சிகள் மற்றும் தரப்புகளின் அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கின்றது.
ஆனால், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை நல்லிணக்கத்தின் மூலமே தடுக்க முடியும். இதனை இப்போது நாம் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடலாம். நல்லிணக்கம் மட்டுமே இன்னொரு ஈழக் கோரிக்கையைத் தடுக்கும்.
போரில் பங்களித்ததற்காக எந்த இராணுவத்தினரும் கைது செய்யப்படவில்லை. முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த நீதிக்குப் புறம்பாக ஊடகவியலாளர்கள் அரசியல் எதிரிகளின் படுகொலைகளில் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு எதிரானவர்களை இலக்கு வைப்பதற்கு சில அதிகாரிகள் இந்தப் படையினரைப் பயன்படுத்தியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.