பிரான்ஸ் அதிபராகத் தெரிவான மக்ரோனுக்கு சிறிலங்கா அதிபர் வாழ்த்து
பிரான்சின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவெல் மக்ரோனுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நேற்று நடந்த இரண்டாவது கட்ட அதிபர் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை தோற்கடித்து மையவாத வேட்பாளரான இமானுவெல் மக்ரோன் மாபெரும் வெற்றி பெற்றார்.
39 வயதான மக்ரோன், 66.06 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மெரைன் லெ பென் 33.94 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் பிரான்சின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்ரோனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிறிலங்கா அதிபர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள இமானுவெல் மக்ரோனுக்கு வாழ்த்துகள். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் செழிப்படைவதற்கு, இந்த வெற்றி மிகப்பெரிய அடித்தளமாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.