பாகிஸ்தானில் சிறிலங்கா கடற்படைத் தளபதி
பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அங்கு அனைத்துலக கடல்சார் மாநாட்டிலும், கூட்டு பயிற்சியை மேற்பார்வையிடும் நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.
பாகிஸ்தான் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதியை பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முகமட் சகாவுல்லா வரவேற்று, அவருடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினார்.
அதேவேளை, 32 நாடுகள் பங்கேற்ற அமான் கூட்டு கடற்பயிற்சி கராச்சியில் இடம்பெற்றது. இதன் ஒரு கட்டமாக, இந்தப் பயிற்சியில் பங்கேற்ற கடற்படைக் கப்பல்களின் அணிவகுப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா கடற்படைத் தளபதியும் பங்கேற்றிருந்தார்.
இந்த அமான் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான, எஸ்எல்என்எஸ் சமுத்ரவும் பங்கேற்றிருந்தது.
மேலும், கராச்சியின் பஹ்ரியா பல்கலைக்கழகத்தில் 7 ஆவது அனைத்துலக கடல்சார் மாநாடு நேற்றுமுன்தினம், ஆரம்பமாகியது. இன்று வரை இந்த மாநாடு இடம்பெறுகிறது.
இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படைத் தளபதி பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதில் 35 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றன.