ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக மீளாய்வு
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டத்தொடரில், சிறிலங்காவின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டத்தொடர் வரும், பெப்ரவரி 13ஆம் நாள் தொடக்கம் மார்ச் 3ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா, உக்ரேன், அயர்லாந்து, ஜோர்தான், எல்சால்வடோர், ஜேர்மனி, ருவாண்டா, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்கா தொடர்பான மீளாய்வு வரும், பெப்ரவரி 22ஆம் நாள் இடம்பெறவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் அகற்றுவது தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தை நாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பது குறித்து இந்த கூட்டத்தொடரில் ஆராயப்படும்.
இதன் போது 23 அனைத்துலக சுதந்திர நிபுணர்கள் சம்பந்தப்பட்ட நாடகளின் பிரதிநிதிகளுடனும், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவர்.
இந்தக் கூட்டத்தொடரின் கண்டறிவுகள் தொடர்பாக வரும் மார்ச் 6 ஆம் நாள் அறிக்கை ஒன்று வெளியிடப்படும்.