சீன இராணுவத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா தூதுவர்
சிறிலங்காவில் எந்தவொரு துறைமுகத்திலும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படாது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று நடந்த சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சிவில் பயன்பாட்டுக்கான மையங்களை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சீன முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அயல்நாடுகளின் கரிசனைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
சந்தேகத்தினால், நாம் எந்தச் சூழ்நிலையையும் உருவாக்க விரும்பவில்லை. இந்தியப் பெருங்கடல் அனைத்துலக வர்த்தகததில் மிகவும் முக்கியமானது என்பது எமக்குத் தெரியும்.
நாம், அமெரிக்கா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்பு ரீதியான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். அம்பாந்தோட்டையில் சிறிலங்கா கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படலாம்.
ஏனைய நாடுகளில் உள்ள நிலை பற்றி தெரியாது, ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்தக் கூடாது என்று முதலீட்டாளர்களுக்கு சிறிலங்கா மிகத் தெளிவாக கூறியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மாத்திரமன்றி, நாட்டின் எந்தவொரு துறைமுகமும், மற்றொரு நாட்டின் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வராது ஆனால் வரும்