இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு
இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் அருண் ஜேட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு14,798 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில், வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும், 135 கோடி ரூபா அதிகமாகும்.
இதில், 6479.13 கோடி ரூபா, நாடுகளுக்கான உதவித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக, சிறிலங்காவுக்கு இந்த ஆண்டில் 125 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக பூட்டானுக்கு 3714 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு 375 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 75 கோடி ரூபா அதிகமாகும்.
கடந்த ஆண்டு 520 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இம்முறை 350 கோடி ரூபாவே ஒதுக்கப்படுகிறது. ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்துக்கு 150 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளுக்கு 330 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு 125 கோடி ரூபாவும், ஒதுக்கப்படவுள்ளன.