தமிழ்நாட்டில் சிறிலங்கா படைகளுக்கு ஜெயலலிதா நிறுத்திய பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி
சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் மீண்டும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சிகளை பெறுவது சிறிலங்கா படை அதிகாரிகளின் நீண்ட மரபாகும்.
இங்கு நிறுத்தப்பட்டுள்ள பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துகிறோம்.
விரைவில் மீண்டும் சிறிலங்கா படையினருக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படும் என்று நம்புவதாகவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் இழைத்த சிறிலங்கா படைகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், வெலிங்டனில் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் இனி பயிற்சி அளிக்கக் கூடாது என்று இந்திய மத்திய அரசுக்கு அறிவித்திருந்தார். அதன்படியே இந்தப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் வெலிங்டனில் பயிற்சிகளை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகிறது.